2010

Wednesday, April 7, 2010

தமிழ்நாட்டைத் துண்டாடுவது தற்கொலை முயற்சி - பெ.மணியரசன்


(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் திசம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

இந்திய விடுதலைப் போராட்டம் 1905 ஆம் ஆண்டுதான் மாபெரும் மக்கள் திரள் போராட்டமாக வடிவெடுத்தது. அதற்குக் காரணம் வங்கப் பிரிவினை. அடிமைப்பட்ட இந்தியாவில் ஒரு மொழி பேசும் ஒரு தேசிய இன மக்களின் தாயகத்தை மத வேறுபாட்டிற்காகவோ அல்லது நிர்வாக வசதிக்காகவோ பிரிக்கக் கூடாது என்பதற்கான சான்றுகள்தாம் மேலே நாம் பார்த்தவை.

ஏனெனில், உலகத்தில் பெரும்பாலான நாடுகள் தேசிய இனத் தாயக அடிப்படையில்தான் அமைந்துள்ளன. நாடுகளின் எல்லை, படை வலிமையைக் கொண்டு தீர்மானிக்கப்பட்ட முறை மாற்றப்பட்டு, தேசிய இனத் தாயக அடிப்படையில் வரையறுக்கப்பட்ட ஜனநாயகக் கோட்பாடு ஐரோப்பாவில் 18-19ஆம் நூற்றாண்டுகளில் செயல்படுத்தப்பட்டது. ‘தேச அரசு உருவாக்கம்’ (Nation State Formation) என்று இக்கோட்பாடு அழைக்கப்பட்டது.

ஓட்டோமான் பேரரசு, ஆஸ்திரியப் பேரரசு ஆகியவற்றில் ஒடுங்கிக் கிடந்த ஐரோப்பிய தேசங்கள் தனித்தனித் தேசிய அரசுகளாக உருவாயின. பிரிந்து கிடந்த ஜெர்மானியச் சிற்றரசுகள் ஒரு தேசமாக இணைக்கப்பட்டன. இதைச் சாதித்த பிஸ்மார்க் இந்தியாவின் பாடநூல்களில் பாராட்டப்படுகிறார்.

வெவ்வேறு தேசிய இனச் சிற்றரசுகளை இந்தியாவுடன் இணைத்ததற்காக வல்லபாய் படேலை ‘இந்தியாவின் பிஸ்மார்க்’ என்று முரண்பட்ட வகையில் ஒப்பிடுகின்றனர். ஜெர்மானிய பிஸ்மார்க், ஒரு மொழி பேசும் ஜெர்மானிய இனத்தவரை ஒரு நாட்டுக்குள் கொண்டு வந்தார். வல்லபாய் படேலோ வெவ்வேறு மொழி பேசும் வெவ்வேறு சிற்றரசுகளை ஒரு துணைக் கண்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார். முன்னது தேச ஒருங்கிணைப்பு. பின்னது தேச மறுப்பு இணைப்பு. அதுவரை வங்காளம் ஒரே மாநிலமாக இருந்தது. விடுதலைப் போராட்ட வீச்சு மற்ற மாநிலங்களைவிட வங்காளத்தில் கூடுதலாக இருந்தது.

அவ்வெழுச்சியைச் சீர்குலைப்பதற்காக வெள்ளை ஏகாதிபத்திய அரசு பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டது. மத அடிப்படையில் இஸ்லாமியர்களுக்குக் கிழக்கு வங்காளமென்றும், இந்துக்களுக்கு மேற்கு வங்காளமென்றும் இரண்டாகப் பிரித்தது. அவ்வாறு இரண்டாகப் பிரித்ததை எதிர்த்து, ஒருங்கிணைந்த வங்கத்தின் இந்து மக்களும் இஸ்லாமிய மக்களும் போர்க்கோலம் பூண்டனர்.

அந்த வங்காள எழுச்சி வெள்ளையர்கள் ஆதிக்கத்துக்கு எதிரான விடுதலைக் கிளர்ச்சியாக வளர்ச்சி அடைந்தது. வங்கத்தில் மட்டுமின்றி இந்தியாவெங்கும் வங்கப் பிரிவினையை எதிர்த்து மக்கள் திரள் போராட்டம் பற்றிக் கொண்டது.

1987 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனாவும் போட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் தமிழர்கள் வசிக்கும் வடக்கு மாநிலத்தையும் கிழக்கு மாநிலத்தையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது என்று கூறப்பட்டது. அதன்படியே வடக்கும் கிழக்கும் ஒரே மாநிலமாக ஆக்கப்பட்டது. பின்னர் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் வடக்கு கிழக்கை இரண்டாகப் பிரிக்க விரும்பினர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அவ்வாறே இரண்டாகப் பிரித்தனர்.

இன்றைக்கும் 1) தொடர்ச்சியான தாயக நிலம், 2) பொது மொழி, 3) பொதுப்பண்பாடு, 4) பொதுப் பொருளியல் வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்டு வரலாற்றில் நிலைத்துள்ள சமூகத்தை ஒரு தேசம் என்று அளவிடும் வரையறுப்பு நடைமுறையிலுள்ளது. அந்த அடிப்படையில்தான் புதிய புதிய தேசங்கள் பிறந்து கொண்டுள்ளன. அவை உலக நாடுகளின் ஏற்பிசைவை பெற்றுக் கொண்டுள்ளன. சோவியத் ஒன்றியம் பதினைந்து நாடுகளாகப் பிரிந்தது. யுகோஸ்லோவியா, செக்கோஸ்லோவோகியா ஆகியவை தேசிய இன அடிப்படையில் பல நாடுகளாகப் பிரிந்தன. ‘எரித்திரியா’, ‘கிழக்கு திமோர்’ ஆகிய நாடுகள்; புதிதாகப் பிறந்தன.

இப்பொழுது ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ‘தெலங்கானா’ மாநிலம் தனியே பிரிக்கப்படுவது தேசிய இனத் தாயக அடிப்படையில் அல்ல. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ் தெலங்கானா மாநிலத்தைப் பிரிக்கக் கோரி சாகும் வரை பட்டினிப் போராட்டம் 2009 நவம்பர் 29ஆம் நாள் தொடங்கினார். அவர் உடல் நலம் மிகவும் மோசமடைந்ததையொட்டி தெலங்கானா பகுதி முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.

இதனால் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் 9.12.2009 அன்று தெலங்கானாவைத் தனியே பிரிக்க ஒத்துக் கொண்டனர். இந்திய அரசின் உறுதிமொழிக்குப் பிறகு 11ஆம் நாள் சந்திரசேகரராவ் தமது உண்ணாப் போராட்டத்தைக் கைவிட்டார். ஆனால் ஆந்திரப் பிரதேசத்தின் இதரப் பகுதிகளில் மாநிலப் பிரிவினையை எதிர்த்துப் போராட்டம் தீவிரமாகியது.

ஆந்திரப் பிரதேசம் நிலப்பரப்பிலும் மக்கள் தொகையிலும் தமிழ்நாட்டை விடப் பெரிய மாநிலம். மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது.

1. இராயல சீமா
2. தெலங்கானா
3. கடலோர ஆந்திரா

தெலங்கானா பகுதி ஐதராபாத் நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்தது. இராயல சீமாவும், கடலோர ஆந்திராவும் வெள்ளையரின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தன. அவை சென்னை மாகாணத்தில் இணைந்திருந்தன. இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு நிஜாம் ஆட்சி நீக்கப்பட்டது. 1953ல் ஆந்திரப் பிரதேசம் மொழிவாரி மாநிலமாகத் தனியே ஒருங்கிணைக்கப்பட்டது.

1970களிலிருந்தே தெலங்கானா பகுதியைத் தனி மாநிலமாக்க வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வருகிறது. அதற்கு அப்பகுதி மக்கள் கூறும் காரணம், இராயல சீமா மற்றும் கடலோர ஆந்திரா பகுதிகளைக் கவனிப்பது போல தெலங்கானா பகுதியை ஆட்சியாளர்கள் கவனிப்பது இல்லை. முதலமைச்சர்களும் தெலங்கானாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

அரிதாக நரசிம்மராவ் தெலங்கானா பகுதியிலிருந்து முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தெலங்கானா பகுதி மக்கள் வளர்ச்சி குன்றியிருக்கிறார்கள். மேலும் தெலங்கானா பகுதியில் பேசப்படும் தெலுங்கிற்கும் கடலோர ஆந்திராவில் பேசப்படும் தெலுங்கிற்கும் பேச்சு வழக்கில் வேறுபாடுகள் இருக்கின்றன. எனவே தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.

தனித் தெலங்கானா மாநிலத்துக்குத் தில்லி ஆட்சியாளர்கள் பச்சைக் கொடி காட்டியதைக் கண்டதும் தமிழ் நாட்டை இரண்டாக, மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சிலர் தமிழகத்தில் முன் வைக்கின்றனர்.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு ‘செந்தமிழ் நாடு’ என்ற தனி மாநிலம் வேண்டுமென மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் மரு.சேதுராமன் கேட்கின்றார். வடதமிழ் நாட்டைத் தனிமாநிலமாக அமைக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மரு.இராமதாசு கேட்கின்றார்; கொங்கு மண்டலத்தைத் தனி மாநிலமாக்க வேண்டுமென்று கொங்கு நாடு முன்னேற்றப் பேரவைத் தலைவர் பெஸ்ட் இராமசாமி கூறுகின்றார்.

தென்தமிழ் நாடு புறக்கணிக்கப்படுகிறது; வடதமிழ்நாட்டுக்கு நிகராகப் பொருளாதார வளர்ச்சி பெறவில்லை என்று சேதுராமனும் மற்றும் சிலரும் கூறுகின்றனர். சிறு மாநில அமைப்புகள்தான் வளர்ச்சிக்கு உகந்தவை என்கிறார் இராமதாசு.

பெரிய கட்சிகளும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் தமிழகத்தைப் பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை எதிர்க்கின்றன. இந்தப் பிரிவினைக் கோரிக்கைக்கு தெற்கு வடக்கு மேற்கு தமிழக மக்களிடையே ஆதரவில்லை. பிரிவினைக் கோரிக்கை வைத்திருக்கும் மரு. சேதுராமன், மரு. இராமதாசு, பெஸ்ட் இராமசாமி ஆகிய மூவருக்குமிடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது. இம்மூவரும் சாதி அடிப்படையிலான அமைப்புகளை நடத்தி வருகின்றனர்.

அவரவர் சாதி சார்ந்த மக்கள் அவரவர் கோரும் ‘மாநிலங்களில்’ திரட்சியாக வாழ்கின்றனர். அவர்கள் கூறுவது போல் தமிழகம் மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டால் தனிப்பெரும் மக்கள் தொகை கொண்ட தங்கள் சாதி அமைப்பு மாநில ஆட்சியைப் பிடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்குமென்று கருதுகிறார்கள். அதை நேரடியாகச் சொல்லாமல் சிறிய மாநில நிர்வாகம் வளர்ச்சிக்கு உதவியாக இருக்குமென்று கூறுகிறார்கள்.

மொழிவாரி மாநிலங்களைச் சிறுசிறு நிர்வாக மாநிலங்களாகப் பிரிக்க வேண்டுமென்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் பெருவிருப்பமாகும். வெவ்வேறு மொழி பேசக் கூடிய பகுதிகளை ஒன்றாகச் சேர்த்து நிர்வாக வசதிக்கேற்ப ஒரே மாநிலமாக்க வேண்டும் என்பதும் அவர்களின் கருத்தாகும். இவ்வாறு இந்திய ஆளும் வர்க்கம் கருதக் காரணம் என்ன? மொழி வழித் தேசிய இனத் தாயக மாநிலங்கள் இந்தியத் தேசியத்தின் எதிர்மறையாகும்; அவை இந்திய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும்; மைய அரசின் அதிகாரங்களுக்கு சவாலாக இருக்கும் என்பவையே அக்காரணங்கள்.

இதே காரணங்களை மனதில் வைத்து, இந்தியா விடுதலை அடைந்தபின் மொழி வாரி மாநிலம் அமைப்பதை காங்கிரஸ் கட்சியும் ஜனசங்கமும் (இப்போது பா.ஜ.க) எதிர்த்தன. விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சி மொழி வாரி மாநிலம் அமைப்பதற்கான தீர்மானங்களை நிறைவேற்றி வந்தது. 1920 ஆம் ஆண்டு நாகபுரியில் கூடிய இந்தியத் தேசிய காங்கிரஸ் மாநாடு காங்கிரஸ் மாநிலக் குழுக்களை மொழிவழி மாநில அடிப்படையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. அத்தீர்மானத்தின் படி அமைக்கப்பட்டதுதான் ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’.

அப்பொழுது சென்னை மாகாணத்தில் ஆந்திர கர்நாடக கேரளப் பகுதிகள் இருந்தன. ஆனால் காங்கிரஸ் மாநில கமிட்டிகள் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டன. விடுதலை அடைந்த பின் மொழி வாரி மாநிலம் அமைப்பதை அதே காங்கிரஸ் கட்சி எதிர்த்தது. பண்டித நேரு மொழி வாரி மாநிலம் அமைப்பதை விரும்பவில்லை. இந்தியத் தேசியத்தை வலியுறுத்திய அனைத்திந்தியத் தலைவர்கள் மொழி வாரி மாநிலப் பிரிவினையை எதிர்த்தனர்.

இந்துத் தேசியம் பேசிய ஜனசங்கம் மொழி வாரி மாநிலம் அமைப்பதை எதிர்த்தது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் பின்வருமாறு கூறினார், “சுயாட்சி உரிமையுள்ள மொழி வழி மாநிலங்களை அமைப்பது பிராந்திய வாதத்தை வளர்த்து இறுதியில் அபாயகரமான பிரிவினைக்கு வழிவகுத்துவிடும். இதற்குப் பதில் கிராம, மாவட்ட, வட்டார, பிராந்திய மட்டங்களில் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். பல மாவட்டங்களை இணைத்து அமைக்கப்படும் ஜனபாத அமைப்புகள் இப்போதுள்ள மாநில அரசுகளை விட மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும்”.(ChristopheJafferelet, Hindu Nationalist Movement and Indian Politics, உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்துப் பாசிசமும் - பழ.நெடுமாறன் பக்.693)

ஜனசங்கத்தின் பொதுச் செயலாளர் தீனதயாள் உபாத்தியாயா ஜனபாத நிர்வாக அமைப்பு பற்றிய திட்டத்தை வெளியிட்டார். இந்தியாவிலுள்ள மாநில எல்லைகளை அழித்துவிட்டு நிர்வாக வசதியை மட்டுமே முன்னிறுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களை இணைத்து ஒரு ஜனபாத அமைப்பு உருவாக்க வேண்டும்.

அப்படி இந்தியா முழுவதிலும் நூறு ஜனபாத அமைப்புகளை உருவாக்க வேண்டும். மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இந்த ஜனபாத அமைப்புகள் இயங்கும். மொழி வழி மாநிலங்களும் அரசுகளும் அடியோடு ஒழிக்கப்பட்டு விடும். இக்கருத்தை 1950களின் தொடக்கத்தில் தனது தேர்தல் அறிக்கையில் ஜனசங்கம் வெளியிட்டது. (மேற்படி நூல் - பழ.நெடுமாறன், பக்;. 693)

அனைத்திந்திய பெருமுதலாளிகளும் மொழி வாரி மாநிலம் அமைப்பதை எதிர்த்தனர். மும்பை மாநிலத்தை மராட்டியம், குஜராத் என்று மொழி அடிப்படையில் பிரிப்பதை குஜராத்தி, மார்வாடி, பார்சி முதலாளிகளும் வணிகர்களும் எதிர்த்தனர். அவர்களில் 69 முக்கியப் புள்ளிகள் கையெழுத்திட்ட விண்ணப்பத்தை மொழி வாரி மாநிலம் அமைப்பது குறித்து அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட தார் குழுவிடம் அளித்தனர்.

1952 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலம் அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் போராடினர். விடுதலைப் போராட்ட வீரரான பொட்டி ஸ்ரீராமுலு இக்கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை பட்டினிப் போராட்டம் சென்னையில் தொடங்கினார். 56ஆம் நாள் உயிர்துறந்தார். இதனால் ஆந்திரப் பிரதேசம் போர்க்களமானது. அதன் பிறகு 1952 டிசம்பர் 19ஆம் நாள் ஆந்திரப் பிரதேச மாநிலம் அமைப்பதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டது. அதன்படி 1953ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலம் அமைக்கப்பட்டது.

அடுத்தடுத்து பல்வேறு தேசிய இன மக்கள் போராடி மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. எனவே இப்பொழுது உள்ள மொழி வாரி மாநிலங்களை வளர்ச்சி அடிப்படையில் சிறுசிறு நிர்வாக மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. போன்ற இந்தியத் தேசிய வெறிக் கட்சிகளுக்கு இனிப்பானதே. இருந்தாலும் அந்தந்த மாநிலத்திலுள்ள தங்கள் கட்சிக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக இப்பிரிவினைகளை இந்திய அரசு உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல் சற்றுக் காலம் தள்ளி அரங்கேற்றுகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலக் கோரிக்கையை காங்கிரஸின் தலைமையிலான இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. பா.ஜ.க. அக்கோரிக்கையை ஆதரித்தது.

இப்பொழுது கடலோர ஆந்திரப்பிரதேசம், இராயலசீமா ஆகிய பகுதிகளிலுள்ள காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தெலங்கானா பிரிவினையை ஏற்காததால் அப்பிரிவினையை நிலுவையில் வைத்துள்ளது இந்திய அரசு. ஆந்திரப் பிரதேசம் தெலுங்கு தேசிய இன மக்களின் தாயகமாகும். நிர்வாக வசதி, வளர்ச்சி என்ற காரணங்கள் கூறி அதைப் பிரிப்பது சரியல்ல என்பதே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் நிலைபாடு. அதற்கு மேல் நாம் அதில் தலையிட விரும்பவில்லை.

மொழி, தாயகம், பண்பாடு, வாழ்முறை ஆகியவற்றால் தனித்தன்மையுடன் விளங்கும் கூர்கா மக்கள் மேற்கு வங்கத்திலும், கூர்க் இன மக்கள் கர்நாடகத்திலும் கட்டுண்டு கிடக்கிறார்கள். இவர்கள் தங்கள் தேசிய இனத் தாயகத்தைத் தனி மாநிலமாக அறிவிக்கக்கோரி போராடுகிறார்கள். இவர்கள் தனித்தேசிய இனத்தவர் என்பதால் தங்கள் தாயகத்தை தனிமாநிலமாகப் பெற அனைத்து உரிமைகளையும் பெற்றவர்கள் ஆவர்.

இவர்களுடைய தனிமாநிலக் கோரிக்கையை த.தே.பொ.க. ஆதரிக்கிறது. தெலுங்கானா சிக்கலும், இவையும் ஒன்றல்ல. தெலங்கானா மாநிலம் ஏற்கப்பட்டதைக் காரணமாக வைத்துத் தமிழ் நாட்டை மூன்று பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும் என்று சிலர் கோருவதை த.தே.பொ.க. வன்மையாக எதிர்க்கிறது.

தனித்தனி நாடுகளாக விளங்குவதற்குரிய மக்கள் தொகை, நிலப்பரப்பு, பண்பாடு, வரலாறு ஆகியவற்றைக் கொண்டுள்ள தமிழ்நாடு போன்ற தேசிய இனத் தாயகங்களைப் பிரித்தால் அது இந்தியத் தேசிய வெறியர்களுக்குக் கொண்டாட்டமாகும். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாற்று உரிமைகளைத் தமிழகத்திற்கு மறுக்கும் அண்டை மாநிலங்களுக்கு இப்பிரிவினை பெரும் மகிழ்வைத் தரும்.

தமிழ்நாட்டைத் துண்டாடுவதை நாம் ஏன் எதிர்க்கிறோம்?

1. தமிழர்களின் நிலப்பரப்பும், மக்கள் தொகையும் பிளவு படுவதால் இப்பொழுது தமிழகத்திற்கு இருக்கின்ற அரசியல் வலு குறைந்து விடும்.

2. இதனால் அன்றாடம் மாநில உரிமைகளைப் பறிப்பதில் குறியாக உள்ள நடுவண் அரசை நிர்ப்பந்தித்துத் தமிழக உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாது போகும்.

3. பிரித்தாளும் சூழ்ச்சி அடிப்படையில் தமிழக மாநிலங்கள் இடையே இந்திய அரசு பகையை வளர்த்துவிடும்.

4. அயல் இனத்தவர் இப்பொழுதே மிகை எண்ணிக்கையில் தமிழகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். தமிழகம் சிறு மாநிலங்களாகப் பிரிந்து கிடந்தால் இன்னும் மிகை எண்ணிக்கையில் பிற மாநிலத்தவர் தமிழகத் தொழில், வணிகம், கல்வி, வேலை ஆகியவற்றைக் கைப்பற்றுவர். மண்ணின் மக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகிவிடுவர். புதுச்சேரி மாநிலம் இதற்கு எடுத்துக்காட்டாக இப்போது உள்ளது.

5. தமிழ்நாட்டில் தமிழ் மொழிதான் ஆட்சி மொழி என்று இன்று உள்ள நிலை மாறி பிற மொழிகளும் ஆட்சி மொழிகள் ஆகக் கூடிய சூழல் உருவாகும். இப்பொழுதே உரியவாறு தமிழைக் கல்வி மொழி ஆக்க முடியாத சூழலில் தமிழகம் பிளவுபட்டால் தமிழ் வழிக்கல்வி என்பது கைகூடாமலே போய்விடும்.

6. அயல் இனத்தவர் அதிகமாகக் குடியேறக் குடியேற வாக்காளர் விகிதத்தில் அயலாரின் தாக்கம் அதிகமாகும். மண்ணின் மக்களின் மாநிலக் கட்சிகள் வலுக்குறைந்து அனைத்திந்திய கட்சிகளே ஆதிக்கம் பெறும். இதற்கும் இப்பொழுது உள்ள எடுத்துக்காட்டு புதுச்சேரி மாநிலமே.

7. தமிழ்த் தேசிய இனம் என்ற தனித்தன்மையும் அதன் வலுவான இருப்பும் சிதறி, தமிழர்கள் தமிழ்நாட்டுக் குள்ளேயே பத்தோடு பதினொன்றாகி விடுவர். இவையே தமிழகத்தைச் சிறு மாநிலங்களாகப் பிரிப்பதை நாம் ஏற்க மறுப்பதற்கான முதன்மைக் காரணங்கள்.

உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் அகிய இந்தி மாநிலங்களில் புதிதாக உத்திராஞ்சல், சட்டீஸ்கர், ஜார்கண்ட் என்று சிறு மாநிலங்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தி மாநிலங்களின் தன்மை வேறு தமிழகத்தின் தன்மை வேறு. புதிதாகப் பிரிக்கப்பட்ட மேற்படி மாநிலங்களில் இந்திதான் ஆட்சி மொழி மற்றும் கல்வி மொழி.

இந்தி மாநிலங்களில் வெவ்வேறு பழங்குடிச் சார்புகள் இருந்தாலும் அங்கு தமிழர்களைப் போன்று வளர்ச்சியடைந்த ஒரு தேசிய இனம் உருவாகவில்லை. இந்தியை அலுவல் மொழியாகவும் கல்வி மொழியாகவும் கொண்டுள்ள அம்மாநிலங்களில், இந்தி யாருக்கும் தாய் மொழி இல்லை. அவர்களுக்குப் போஜ்பூரி, அவதி, மைதிலி, கல்யாணி, ராஜஸ்தானி போன்ற பல மொழிகள் தாய்மொழியாக இருக்கின்றன.

ஆனால் அத்தாய்மொழிகள் பொது மொழி (Standard language) என்றளவுக்கு வளர்ச்சியடையாத கிளை மொழிகளாகவே (Dialect languag) இருக்கின்றன. இம்மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையில் உருது பேசும் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். இந்தியும் உருதும் கிட்டத்தட்ட ஒரே மொழிதான். வடமொழி வரிவடிவத்தில் எழுதினால் இந்தி என்றும் அரபி வரி வடிவத்தில் எழுதினால் உருது என்றும் அறியப்படுகிறது.

இக்காரணங்களால் இந்தி பேசும் மாநிலங்களில் வலுவான அடையாளங்களோடு ஒரு தேசிய இனம் உருவாகவில்லை. உ.பி. , ம.பி. , பீகார் போன்ற இந்தி மாநிலத்தவர்க்கு ‘இந்தியன்’ என்ற இல்லாத தேசிய இனமே அடையாளமாக உள்ளது. அவர்களுக்கென்று தனித்தன்மையுள்ள தேசிய இனம், தமிழ்த்தேசிய இனம் போன்று எதுவும் இல்லை. ஆகவே அம்மாநிலங்களை நிர்வாக வசதி கருதி சிறுசிறு பிரிவுகளாகப் பிரித்தாலும் அங்கு தேசிய இனப் பாதிப்பும் பொது மொழிப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

விரிந்து பரந்து கிடக்கும் இந்த இந்தி மண்டலத்தின் மக்கள் தொகை, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 40 விழுக்காட்டுக்கும் மேல் உள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 225 பேர் இந்த இந்தி மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியன் என்ற பொது அடையாளத்தையும், இந்தி என்ற பொது மொழியையும் ஏற்றுள்ள இக்கூட்டத்திலிருந்துதான் இந்தியப் பெருமுதலாளிகளும் பார்ப்பன சக்திகளும் தங்களுக்கான மக்கள் அடித்தளத்தை அடையாளம் கண்டுள்ளன. இங்கு அவை ஆழக் கால் பதித்துள்ளன.

அதற்கு இந்து மதம் பேருதவி புரிகிறது. இம்மண்டலத்திலிருந்துதான் பெரும்பாலும் பிரதமர்களும் மெய்யான அதிகாரம் படைத்த ஆட்சியாளர்களும் உருவாகிறார்கள். எனவே நடைமுறையில் இந்தி மண்டலம் ஓர் உறுப்பாக செயல் வடிவம் பெற்றுள்ளது. அம்மாநிலங்களுக்குள் சிறுசிறு வேறுபாடு இருப்பது இந்த ஒரு மண்டல உணர்வைப் பாதிப்பதில்லை.

மேற்கண்ட கூறுகளைக் கவனத்தில் கொள்ளாமல் தமிழ் நாட்டையும் இந்தி மண்டலத்தில் சிறுசிறு மாநிலங்கள் உருவாவது போல் பிரிக்க நினைத்தால் அது தமிழினம் தன்னைத் தானே சிதைத்துக் கொண்டு வீழ்த்திக் கொள்ளும் முயற்சியாக முடியும்.

இந்தி மண்டலத்தில் காலூன்றி நிற்கும் பெருமுதலாளிய - இந்துத்துவா சக்திகள் தமிழ்நாடு வளர்ப்பதற்காகவே பிரிவினை கோருவதாகக் கூறுகிறார்கள். இவர்கள் வரையறுப்பில் வளர்ச்சி என்பது என்ன?

வடநாட்டு மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் பெரும் பெரும் தொழிற்சாலைகள், இந்திய அரசின் பெரும் பெரும் ஆலைகள், விண்முட்டும் கட்டடங்கள் போன்றவைதாம் வளர்ச்சியின் அடையாளங்களா? இவ்வளர்ச்சி சமூகத் திலுள்ள மிகச் சிறுபான்மையான பெருமுதலாளிகள், பெருவணிகர்கள், உயர் நடுத்தர வர்க்கத்தினர் போன்றோர் வளர்ச்சியே ஆகும். ஒட்டு மொத்த சமூக வளர்ச்சியாகாது.

இவை கூவம், அடையாறு போன்ற பல தூயநீர் ஆறுகளை சாக்கடைகளாக மாற்றியிருக்கின்றன. இதே போல் காவிரி, தாமிரபரணி, வைகை போன்ற ஆறுகளும் போன்ற வடமொழி சாராத தேசிய இனத்தாயகங்களைச் சிறுசிறு நிர்வாக மாநிலங்களாகப் பிரிக்கும் சூழ்ச்சித் திட்டத்தில் ஏற்கெனவே இருக்கின்றன. இதன் வளர்ச்சிப் போக்கில், அடுத்தடுத்துள்ள வெவ்வேறு மொழி பேசுகின்ற பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரு நிர்வாக மாநிலம் அமைக்கும் திட்டத்திலும் அவர்கள் இருக்கிறார்கள்.

எடுத்துக் காட்டாக வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களை அவற்றை அடுத்துள்ள சித்தூர் மற்றுமுள்ள ஆந்திர மாவட்டங்களோடு சேர்த்து ஒரு மாநிலமாக்குவது. மருத்துவர் இராமதாசு போன்றோர் கோரும் தமிழகப் பிரிவினை மேற்படி தமிழின எதிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாகவே அமையும்.

இந்திய அரசு இன்னொரு 'மாநிலங்கள் சீரமைப்புக் குழுவை” உருவாக்கி, புதிய மாநிலக் கோரிக்கைகள் குறித்து ஆராயப் போவதாக செய்திகள் வருகின்றன. அப்போது இராமதாசு போன்றவர்கள் தமிழ்நாட்டைத் துண்டாட கோரிக்கை வைப்பார்கள். அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தில்லி ஆதிக்கவாதிகள் கணக்குப் போட்டிருப்பார்கள்.

புதிதாக மாநிலக் கோரிக்கையாக எழுந்தால் அதுபற்றி தொடர்புடையவர்களோடு பேசி தீர்வு காண வேண்டுமே தவிர, இவ்வாறு மேலும் ஒரு மாநில சீரமைப்புக் குழுவை ஏற்படுத்துவது நயவஞ்சகத்திட்டமாகும். தமிழகத்தைத் துண்டாட விரும்புவோர் தமிழ்நாட்டில் வளர்ச்சி குன்றியுள்ள வட்டாரங்களை சாக்கடைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. கூவம், அடையாறு சாக்கடை ஆறுகளின் கரை நெடுக குடிசை போட்டு வாழும் இலட்சக்கணக்கான குடிமக்கள்தாம் சென்னைக் கோபுரங்களின் அஸ்திவாரங்கள். இப்படிப்பட்ட குடிசைகள் தமிழ்நாடு முழுவதும் பரவவேண்டும் என்பதுதான் தமிழக மாநிலப் பிரிவினையாளர்களின் இலட்சியமா?

‘பசுமைத் தாயகம்’ அமைப்பின் மூலம் சுற்றுச்சூழல் குறித்து இயக்கம் நடத்தி வரும் மருத்துவர் இராமதாசு சென்னை போன்ற இயற்கைக்கு முரணான வளர்ச்சியைத் தமிழகமெங்கும் விரிவாக்க விரும்புகிறாரா? வேளாண் நிலங்களைச் சாகடித்து அவற்றின் மேல் விண்முட்டும் கான்கிரீட் கல்லறைகள் எழுப்புவதுதான் வளர்ச்சியா? இவ்வாறு ஐரோப்பாவில் முதலாளியம் ஏற்படுத்திய இயற்கைக்கு முரணான வளர்ச்சியினால் உண்டான தீய விளைவுகளை நீக்கிடவே அந்நாடுகளில் பசுமை இயக்கங்கள் வளர்ந்துள்ளன.

‘வளர்ச்சி’ குறித்து அடிப்படைக் கோட்பாடுகள் இல்லையெனில், ஒருவரை விழுங்கி இன்னொருவர் வளர்வது, இயற்கையை அழித்துச் செயற்கையைப் புனைவது என்ற முதலாளிய இலாப வெறிப் போட்டியும், தனி நபர் நுகர்வு வெறித் தணிப்பும்தான் வளர்ச்சி என்றாகிவிடும்.

குறிப்பிட்ட சில சிறப்புப் பொருளியல் மண்டலங்களை எதிர்ப்பது, அரசுத் துறை தொழிற்சாலைகளை எதிர்ப்பது என்ற அளவில் தமது சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வேளாண் பாதுகாப்புக் கொள்கையை மருத்தவர் இராமதாசு சுருக்கிக் கொள்ளக்கூடாது. சென்னை - திருப்பெரும்புதூர் மண்டலம் போன்ற வளர்ச்சியைத் தான் பொதுவில் அவர் விரும்புகிறார் எனில் அவரது கொள்கைகள் ஐயத்திற்கு இடமாகி விடும்.

உலகமய முதலாளியம் தேசிய இனத் தாயகங்களைக் கலைத்து விட்டு அவற்றை வெறும் சந்தைத் திடலாக மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. முதலாளியத்திற்கு தேசிய இனம், தேசிய இனமொழி என்பவை ‘தடைக் கற்களாகவே’ தெரிகின்றன. முதலாளிகளுக்கு மக்கள் வெறும் வாடிக்கையாளர் கூட்டமாக இருந்தால் போதும். முதலாளியத் தேர்தல் கட்சிகளுக்கு மக்கள் வெறும் வாக்காளர்களாக இருந்தால் போதும். இந்த வகையில் மக்கள் தேசிய இனம், தேசிய மொழி, தேசியத் தாயகம் கடந்த உதிரிக் கூட்டமாக இருப்பதையே முதலாளிகள் விரும்புகின்றனர்.

கையில் ஒரு கைபேசி, பையில் ஒரு கைபேசி, குடிசைக்குள் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி - இவைதான் வளர்ச்சியின் அடையாளமா? அந்தக் குடிசைக்குள் கழிவறை கிடையாது. சமையலறை கிடையாது. படுக்கையறை கிடையாது. மூன்று வேளை உணவு கிடையாது. விருந்தினர் வந்தால் எடுத்துப் போட இரண்டு நாற்காலி கிடையாது. இதுதான் வளர்ச்சியா?

வளர்ச்சி என்பது சமூகத்தில் சில செல்வந்தர்களின் செங்குத்தான வளர்ச்சி அன்று. சமூகம் முழுமையும் வளர்கின்ற கிடைநிலை வளர்ச்சியாகும். இயற்கைச் சமன்பாட்டுக்கும் சுற்றுச் சூழலுக்கும் சக மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் உணவு, உடை, உறையுள், சமூக உறவு ஆகியவற்றில் தன்னிறைவு காண்பதே மெய்யான வளர்ச்சியாகும்.

ஒரு சமூகத்தில் தன்தேவை நிறைவு என்ற அடிப்படையில் உற்பத்தியும் வழங்கலும் இருக்கும்போதுதான் இந்த வளர்ச்சி ஏற்படும். முதன்மையாக இலாப நோக்கு, வெளிநாட்டு வணிகம் போன்றவற்றை இலக்காகக் கொண்டு உற்பத்தியும் வழங்கலும் நடைபெறும் போது செங்குத்தான வளர்ச்சிதான் ஏற்படும்.

அதனால் இயற்கைச் சமன்பாடும் சுற்றுச் சூழலும் சக மனிதர்களும் பாதிக்கப்படவே செய்வர். முதலாளியத்தின் இருப்பு தனிநபர் இலாப வெறியில் உள்ளது. அது சமூக உறுப்பினர்களையும் தன்னைப் போலவே உதிரிகளாக மாற்றியிருக்கிறது. ஒரு வேறுபாடு, அது தன் கையில் பெரும்பெரும் தொழில் வணிக நிறுவனங்களை வைத்துக் கொள்கிறது; சமூக உறுப்பினர்களை அந்நிறுவனங்களின் கூலிக்காரர்களாக ஆக்கிவிடுகிறது. அதை மூடி மறைப்பதற்காக குடிமக்கள் என்ற பட்டத்தைச் சூட்டி விடுகிறது. அதிலும் ஒரு மாற்றம் செய்து நுகர்வோர் குடிமக்கள் என்று அவர்களை வாடிக்கையாளர்களாக வகைப்படுத்தியுள்ளது.

இவ்வாறான முதலாளிய வளர்ச்சி குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைபாடு என்ன? உண்மையில் அது பாட்டாளி மக்களுக்கான கட்சிதானென்றால் முதலாளிய வளர்ச்சி முறையை மறுத்து சமூக வளர்ச்சி முறையை முன்மொழிய வேண்டும். அவ்வாறு சமூக வளர்ச்சி நோக்கில் சிந்தித்தால் தமிழ்நாட்டைத் துண்டு போடுவதை ஏற்காமல் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கு உரிய தமிழ்த் தேசிய நிகரமை அரசியலை - பொருளியலை முன்வைக்க வேண்டும்.

அடுத்து, “மக்களுக்கு நெருக்கமாக நிர்வாகம் இருக்கவேண்டும். எனவே தமிழ்நாட்டைச் சிறுசிறு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும்” என்கிறார் மருத்துவர் இராமதாசு. எல்லா அதிகாரங்களையும் எங்கோ இருக்கிற தில்லி குவித்து வைத்துள்ள ஏகாதிபத்திய நடுவத்திலிருந்து மாநிலங்களுக்கு அதிகாரத்தைப் பெறப் பாட்டாளி மக்கள் கட்சி என்ன கோரிக்கை வைத்திருக்கிறது? அதற்காக இதுவரை அக்கட்சி நடத்திய போராட்டங்கள் யாவை? நிர்வாகம் மக்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டுமென்று மெய்யாகவே நினைத்தால் முதலில் கைவைக்க வேண்டிய இடம் தில்லி அதிகார மையமே.

அதை விடுத்து அதிகாரங்களையும் உரிமைகளையும் இழந்து புதிய காலனியாக ஆக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்குள் நிர்வாகத்தை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு போவதாகச் சொல்வது வெறும் பசப்பல் ஆகும். தில்லி ஏகாதிபத்திய அதிகார மையத்தின் பா.ஜ.க. தலைமையிலும், காங்கிரஸ் தலைமையிலும் பங்கெடுத்த கட்சிதான் பா.ம.க. வருங்காலத்திலும் வாய்ப்புக் கிடைத்தால் அந்த அதிகார ஏகபோகத்தில் மூழ்கித் திளைக்கத் தயங்காத கட்சிதான் பா.ம.க. நகராட்சிக்குச் சற்று மேற்பட்ட அதிகாரம் படைத்த தமிழக மாநில நிர்வாகத்தைத் தமிழகத்தைத் துண்டாடுவதன் மூலம் மக்களுக்கு நெருக்கமாக்குவதாகச் சொல்வதில் எந்தத் தர்க்கமும் இல்லை; எந்த ஞாயமும் இல்லை.

நிர்வாகம் மக்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதும் மக்களால் இயக்கப்படவேண்டும் என்பதும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் முதன்மையான கொள்கைகளில் ஒன்று. அதை நிறைவேற்ற முதல் தேவை, தில்லி ஏகாதிபத்திய அதிகார மையத்திலிருந்து தமிழ்நாடு விடுதலை பெறுவதாகும். அடுத்து விடுதலை பெற்ற தமிழ்த் தேசக் குடியரசு, ஒரு கூட்டாட்சிக் குடியரசாகச் சீரமைக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசக் கூட்டாட்சியில் தமிழகம் 4 மாநிலங்களாகப் பிரிக்கப்படலாம். 4 சட்ட மன்றங்கள் வைத்துக் கொள்ளலாம். தமிழ்த் தேசத்திற்கு ஒரு நாடாளுமன்றம் இருக்கும்.

பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சி உண்டாக்கிய வருவாய் மாவட்டங்கள் கலைக்கப்பட்டு, ஊராட்சி ஒன்றியங்கள் அடிப்படை நிர்வாக அமைப்பாக மாற்றப்படும். அவை சிறு சட்டப்பேரவை போல் அதிகாரம் பெற்றிருக்கும். அதன் கீழ் ஊராட்சி மன்ற நிர்வாகம் மெய்யான மக்கள் நிர்வாகமாக இயங்கும். அதற்குரிய அதிகாரங்களை ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகள் பெற்றிருக்கும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறும் கைதூக்கிகளாக இல்லாமல் சட்டம் இயற்றுவதுடன் அதைச் செயல்படுத்தும் நிர்வாகப் பொறுப்பும் உள்ளவர்களாக இருப்பர். இவ்வாறான தமிழ்த் தேசிய மக்கள் நிர்வாகம் குறித்து வேறொரு வாய்ப்பில் விரிவாகவும் நுணுக்கமாகவும் விளக்கலாம்.

மக்களுக்கு நெருக்கமாக நிர்வாகம் இருக்க வேண்டுமென்று கூறுகின்ற பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு மற்றும் மருத்துவர் சேதுராமன், பெஸ்ட் இராமசாமி ஆகியோர் தமிழகத்தைத் துண்டாடுவதைத் தவிர்த்து வேறு வகைத் திட்டங்கள் எதுவும் வைத்திருக்கிறார்களா? அவ்வாறிருந்தால் அதையும் அவர்கள் விளக்க வேண்டும்.

அடுத்து பெரும் எண்ணிக்கையிலுள்ள தங்கள் வகுப்பினர் முதலமைச்சர்களாக வரவேண்டும் என்று கருதினால் அதில் தவறு எதுவும் இல்லை. அவர்கள் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர்களாக வர உரிமையுடையவர்கள்தாம். அதற்காகத் தமிழ்நாட்டைத் துண்டு போட்டால், தங்களது அப்பத்தைச் சமமாகப் பங்கிட்டுத் தரும்படி குரங்கிடம் பஞ்சாயத்துக்குப் போன கதையாகிவிடும். அப்பத்தை இரண்டு துண்டாக்கிய குரங்கு, ஒன்று இன்னொன்றை விடக் கூடுதலாக இருப்பதாகச் சொல்லிச் சொல்லி அதைச் சமன்படுத்துவதற்காக அப்பத்தின் துண்டைச் சிறிது சிறிதாகப் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டது. இப்படியாக இரண்டு துண்டுகளையும் குரங்கே சாப்பிட்டு விட்டது. அதைப் போல் இரண்டு துண்டுத் தமிழ் நாட்டின் உரிமைகளையும் அதிகாரங்களையும் தில்லி கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்துக் கொள்ளும்.

அந்த நிலையில் முதலமைச்சராக இருப்பவருக்கு என்ன அதிகாரமும் உரிமையும் இருக்கப் போகிறது? அதைக் கொண்டு அந்த முதலமைச்சர் தன் வகுப்பு மக்களுக்கும் இதரத் தமிழ் மக்களுக்கும் என்ன வளர்ச்சியைக் கொடுக்க முடியும்? பிரித்தானியக் காலனி ஆட்சியில் அங்கீகரிக்கப்பட்ட சிற்றரசர்கள் தாங்கள் முடிசூட்டிக் கொள்ளலாமே தவிர மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முழு இறையாண்மையும் அதிகாரமும் பெற்றவர்களாக இல்லை. அதைப் போல் துண்டாகிப் போன தமிழ்ப் பகுதிகளின் முதலமைச்சர்கள் என்ற பட்டத்தைச் சுமக்கலாமே தவிர இப்போதுள்ள குறைந்தபட்ச அதிகாரங்கள் கூட இருக்காது.

இன்னொரு முகாமையான செய்தியை கவனிக்க வேண்டும். துண்டுபட்டுப் போன தமிழ் மாநிலங்களில் அயல் இனத்தார் வரத்து இன்னும் அதிகமாகும். அப்பொழுது மண்ணின் மக்களிடம் உருவான மாநிலக் கட்சிகளை அயலார் ஏற்க மாட்டார்கள். தங்கள் பணத்தைக் கொண்டு தமிழர் வாக்குகளையும் விலைக்கு வாங்கி காங்கிரஸ், பா.ஜ.க போன்ற தில்லி ஏகாதிபத்தியக் கட்சிகளையே மாநில ஆளுங்கட்சியாக அல்லது எதிர்க்கட்சியாகக் கொண்டு வருவார்கள்.

இதற்குச் சரியான எடுத்துக்காட்டு இப்போதுள்ள புதுச்சேரி ஒன்றியப் பிரதேசம். அது தமிழர்களின் தாய் மண்ணாகும். அங்கு தமிழர்கள், குறிப்பாக வன்னிய மக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்ற போதும் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியவில்லை. வன்னியர் அடித்தளத்தைக் கொண்டுள்ள பா.ம.க.வும் ஆட்சிக்கு வரமுடியவில்லை. சட்டப் பேரவையில் கணிசமான இடங்களைக் கூட பா.ம.க.வால் கைப்பற்ற முடியவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் வெளிமாநிலத்தவர் மிகையாகப் புதுச்சேரியில் குடியேறியதுதான்.

தமிழ்நாட்டைத் துண்டாடக் கோருவோர் அதைக் கைவிட்டு தில்லி ஏகாதிபத்திய நடுவத்தில் கட்டுண்டு கிடக்கும் தமிழ்நாட்டு உரிமைகளை மீட்கப் போராடுமாறும், தமிழ் நாட்டுக்குள் உண்மையான சமூக வளர்ச்சியும் மக்களுக்கு நெருக்காமான நிர்வாகமும் கிடைக்கச் சரியான திட்டங்களை வைத்துப் போராடுமாறும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

தமிழ் ஈழத்தில் வடக்கு கிழக்கு மாநிலங்களைத் தனித்தனியே பிரித்தது தவறு. அவற்றை ஒரே மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டைத் துண்டாட நினைப்பது முரண்பாடான நிலைபாடு என்பதை உணர்ந்து தன் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். மொழிவாரி மாநிலப் பிரிப்பின் போது ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றிடம் தன்னுடைய தாயகப் பகுதிகள் பலவற்றை இழந்துள்ளது தமிழ்நாடு. இழந்த தமிழ்ப் பகுதிகள் சிலவற்றைத் தமிழகத்தின் வடக்கிலும் தெற்கிலும் மீட்பதற்காக சிறைப்பட்ட தமிழர்களை, சிறையில் உயிர் நீத்த தமிழர்களை, துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான தமிழர்களை, தடியடி பட்ட தமிழர்களை, சொத்துகளை இழந்த தமிழர்களை எண்ணிப் பார்த்து தமிழகத்தைத் துண்டாடும் கோரிக்கையை அவர்கள் கைவிட வேண்டும்.

இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து தமிழகத்தைத் துண்டாட ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று அனைத்துத் தமிழர்களும் உறுதி பூண வேண்டும்.

அடுத்து இன்றைய அரசியல் கட்டமைப்புக்குள் தமிழ்நாட்டின் அனைத்து பகுதியையும் சொந்தத் தாய் மண்ணாகக் கருதி சமமாக நடத்தி அதிகாரத்தில் சமபங்கு வகிக்கக் கூடிய புதிய நிலைமைகளைத் தோற்றுவிக்க ஒவ்வொருவரும் உறுதி பூண வேண்டும்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் திசம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

Friday, February 12, 2010

தத்துவங்களின் முதுகுக்குப் பின்னால்..



“தத்துவமில்லாத நடைமுறை குருட்டுத் தனம்; நடைமுறை யில்லாத தத்துவம் மலட்டுத்தனம்” என்று மார்க்சியம் கூறும். மெய்யியல் (Philosophy), கருத்தியல் (Ideology) இரண்டிற்கும் இக்கூற்று பொருந்தும். பல்லாயிரம் ஆண்டுகளாக, பலநூறு தலைமுறைகளாகக் கைமாற்றிக் கைமாற்றிக் கொடுக்கப்பட்ட மனித சிந்தனையே கருத்தியல் வளர்ச்சியின் உயிர்.

மனித சிந்தனை என்பது தனிப்பட்ட மனிதனின் சிந்தனையும், சமூகச் சிந்தனையும் கலந்ததே. டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலில் பிரடெரிக் எங்கெல்ஸ் பின்வருமாறு கூறினார்.

“தனித மனித சிந்தனை இல்லை. ஆனால் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால மனிதர்கள் பலகோடிப் பேரின் தனிப்பட்ட சிந்தனையாகவே அது நிலவுகிறது”.

இதன் பொருள், சமூக அனுபவத்தின் ஊடாகத் தனிமனிதர்கள் பெறும் சிந்தனைகளும் அத்தனிமனிதர்கள் அவற்றைத் தொகுத்துத் தங்களின் புதிய கருத்தையும் இணைத்து வழங்கும் கருத்துகளுமே தனிமனிதர்களும் முகாமையான பாத்திரம் வகிக்கிறார்கள்.

புறச் சூழல்கள் மனித சிந்தனையை வளர்க்கின்றன. மனித சிந்தனைகள் புறச்சூழலை மாற்றுகின்றன என்றார் காரல் மார்க்ஸ். ஃபாயர் பாக் தத்துவம் குறித்த ஆய்வியல் கட்டுரையில் அவர் இவ்வாறு கூறினார்:

“கல்வி கற்பிக்கிறவருக்கே கல்வி கற்பிக்க வேண்டிய தேவை இருக்கிறது”

சமூக அனுபவம் என்பதில் புறச்சூழல்கள், சமூகத் தலைமுறைகளின் அறிவு வளர்ச்சி, வளர்ப்பு ஆகியவை அடங்கும். தனிமனித சிந்தனை என்பதில் குறிப்பிட்ட தனிமனிதனின் அறிவாற்றல் அடங்கும். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வளர்வோர் அனைவரும் ஒரே மாதிரியான அறிவாற்றல் பெற்று விடுவதில்லை. அவர்களுள் தனிமனித ஆற்றல் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. ஒரு பெற்றோர்க்குப் பிறந்து ஒரே குடும்பச் சூழலில் வளர்ந்து ஒரு கல்விக் கூடத்தில் பயிலும் பிள்ளைகள் அனைவரும் ஒரே அளவில் அறிவாற்றல் பெற்றுவிடுவதில்லை.

இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்கள் மட்டுமின்றி, உடல் ஒட்டிப்பிறந்த இரட்டையரிடம் கூட ஒரே தன்மையில் அறிவாற்றலோ அல்லது பண்புகளோ அமைவதில்லை. புறச்சூழலை உள்வாங்கி அதற்கு எதிர்வினைபுரியும் ஆற்றல் ஒவ்வொரு தனிநபருக்கும் வேறுபடுகிறது.

அடிமைப்பட்ட இனத்தில் ஒரே காலத்தில் எல்லோர்க்கும் விடுதலைச் சிந்தனைகள் உருவாவதில்லை. புரட்சி முதலில் தனி மனிதனின் மனதிலிருந்து தோன்று கிறது என்றார் அந்தோணியோ கிராம்சி.

தானும் சக மனிதர்களும் அடிமைப்பட்டிருக்கும் சமூகச் சூழ்நிலை இல்லாமல் தனிமனிதன் மனதில் புரட்சி எண்ணம் தோன்றிவிடாது. முதலாளியம் வளர்ச்சி யடையாத புறச்சூழலில் “மூலதனம்” என்ற நூல் பிறக்க முடியாது. அதே வேளை, முதலாளியச் சூழலில் எல்லோரும் காரல்மார்க்ஸ் ஆகிவிடமுடியாது. ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ போன்ற முந்திய தலைமுறை முதலாளியப் பொருளியல் வல்லுநர்கள் வரிசை தோன்றும் முன் காரல்மார்க்சும் உருவாகியிருக்க முடியாது. கருத்தியல் என்பது முழுக்க முழுக்கத் தனிமனித மொத்தக் கண்டுபிடிப்பு அன்று . அதேபோல் சமூக உறுப்பினர்கள் அனைவரும் கருத்தியல் வழங்கிட இயலாது.

குறிப்பிட்ட சூழலில் வாழும், குறிப்பிட்ட சமூகத்தில், குறிப்பிட்ட ஆற்றல் உள்ள தனிமனிதர்களே கருத்தியல் வழங்குகிறார்கள். மனித சிந்தனைக்கு எப்போதும் வரம்புண்டு. அடுத்தடுத்த தலைமுறையால் முடிவில்லாமல் அது வளர்க்கப்பட வேண்டும். சிறு பிழையுமின்றி ஓர் உண்மை கண்டறியப்பட்டிருக்கிறது என்றால் அது பல தவறுகளுக்குப் பின்னால்தான் கைவரப் பெற்றிருக்கும் என்றார் எங்கெல்ஸ்.

இவ்வாறான உண்மைகளில் ஒன்றோ அல்லது மற்றதோ மனித வாழ்வின் முடிவில்லாத காலப் போக்கில் மட்டுமே முழுமையாகக் கைவரப் பெறமுடியும் என்றார்.

“நிரந்தரமான உண்மை என்று ஒன்றில்லை. அறியப்பட்ட உண்மைகள்ள்ள்ள்ள் சார்புத் தன்மை உள்ளவையே (Relative Truth). எடுத்துக்காட்டாக, உயர்நிலை விலங்குகள் தமது வயிறுகள், குடல்கள் மூலமாகவே செரிமானம் நடத்துகின்றன என்று கூடத் துணிந்து கூற முடியாது. காரணம், தலையில் மையப்பட்டிருக்கும் நரம்பு மண்டலச் செயல்பாடு செரிமானத்திற்கு இன்றியமையாதது.

“எனவே, இறுதியும் அறுதியுமான உண்மைகளை வேட்டையாடி வெல்லத் தொடங்குவோர் சிலர், 1821 மே 5-ஆம் நாள் நெப்போலியன் இறந்தார்; உழைக்காமல் மனிதர்கள் வாழமுடியாது என்பன போன்ற ஆரவார அறிவிப்பு களையும், பழஞ்செய்திகளையும் நிரந்தர உண்மைகளாகக் கூறிக் கொண்டிருக்கலாம்.

“அதற்காக இப்பொழுது நாம் எட்டியுள்ள அறிவின் கட்டம் சிறிதும் இறுதியானதல்ல என்ற உண்மையைக் கண்டு கலவரமடைய வேண்டாம். இது ஏற்கெனவே விரிந்த அளவிலான தீர்ப்புகளைத் தழுவியதாக இருக்கிறது.”

- எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு.

கருத்தியல் என்பது வளர்ந்து கொண்டே இருக்க வேண்டிய நிலையில் தான் உள்ளது. வளர்தல் என்பதன் பொருள் என்ன? காலாவதியாகிவிட்ட அல்லது பொருந்திவராத அல்லது பிழையாக இடம் பெற்றுவிட்ட கருத்துகள் களையப்பட்டு, புதிய உயிர்ப்பும், பொருத்தப்பாடும், பிழை நீக்கமும் செய்யப்பட்ட புதிய கருத்துகள் அக்கருத்தியலில் இணைக்கப்படுவது தான் கருத்தியல் வளர்ச்சி.

ஒப்பீட்டளவில் அனைத்தம்சத் தன்மையுடன் கூடுதல் வளர்ச்சி பெற்று, ஒழுங்கமைப்பும், தன்னமைதியும், வளர்வதற்கான வாயில்களும் கொண்ட தத்துவம் மார்க்சியம் மட்டுமே. ஆனால் மார்க்சியம் என்பது வளர்ந்து கொண்டே இருக்க வேண்டிய தத்துவம் ஆகும். முற்ற முழுதாக வளர்ந்து முடிந்துவிட்ட தத்துவம் அல்லது கருத்தியல் எதுவும் இல்லை. அப்படி ஒன்று இருப்பதாகச் சொன்னால் அது செத்துப்போயிருக்கும்.

இந்தியாவில், தமிழ்நாட்டில் மார்க்சிய அரசியல் தலைவர்கள் இந்த மண்ணுக்கேற்ப மார்க்சியத்தை வளர்த்தார்களா? இல்லை. மார்க்சியம் வளர்ந்துகொண்டே இருக்க வேண்டிய தத்துவம் என்று சொல்லளவில் கூறினார்கள். நடைமுறையில் அதைக் கடைபிடிக்கவில்லை. அவர்கள் மூளையை மூன்றாவது அகில ஆவணங்களும் ரசிய, சீனப்புரட்சிகளின் சாதனைகளும் அடைத்துக் கொண்டடுவிட்டன.

இந்தியத் துணைக் கண்டத்தின் தனித்தன்மைகளாக உள்ள வர்ணம், சாதி, பார்ப்பனியம் ஆகியவை குறித்து அவர்களின் ஆராய்ச்சி என்ன?அம்முரண்பாடுகளைத் தீர்க்க அவர்கள் முன் வைத்த முடிவுகள் யாவை? எதுவுமில்லை. நிலக்கிழமை ஒழிக்கப்பட்டால் இவை எல்லாம் தீர்ந்து விடும் என்று கிளிப்பிள்ளை போல் சொல்லி வந்தார்கள். “பார்ப்பனியம்” என்ற ஆதிக்கக்

கருத்தியல் இருப்பதையே அவர்கள் ஏற்கவில்லை.

நிலக்கிழமை செல்வாக்கிழந்து, முதலாளியம் வளர்ந்துவிட்ட நிலையிலும் இந்தியாவில், வர்ண, சாதி ஆதிக்கம் பார்ப்பனிய ஆதிக்கம் ஆகியவை கோலோச்சுகின்றன. இந்திய அரசு கட்டமைப்பிலேயே பார்ப்பனிய ஆதிக்க சக்திகள் இருக்கின்றன. அனைத்திந்திய சமூக மாறுதல்

அல்லது அனைத்திந்தியப் புரட்சி பேசும் எந்தக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் அல்லது எந்த மா.லெ. குழுவும் இந்த வரையறுப்பை தனது கட்சித் திட்டத்தில் அடுத்து, இந்தியா ஒரு தேசமல்ல் அதற்குள் பல தேசங்கள் இருக்கின்றன என்ற அடிப்படை உண்மையைக் கூட இந்தக் கம்யூனிஸ்ட்டு கட்சிகளும், மா.லெ. குழுக்களும் ஏற்கவில்லை.

வர்ணம், சாதி, பார்ப்பனியம் குறித்த துல்லியமான ஆய்வுகளை மார்க்சோ லெனினோ செய்ய வாய்ப்பில்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்பவர்கள் தாம் அந்த ஆய்வை செய்ய முடியும். ஆனால் தேசம், தேசிய இனம் குறித்த ஆய்வுகளை லெனினும் ஸ்டாலினும் செய்துள்ளார்கள். ரசியப்புரட்சியின் வெற்றிக்குப் பின் இறையாண்மையுள்ள தேசங்களின் ஒன்றியத்தை நிறுவியும், பிரிந்து போக விரும்பிய தேசிய இனத்தைப் பிரிந்துபோக அனுமதித்தும் ஓர் எடுத்துக்காட்டை உருவாக்கினார்கள். அவர்களிடமிருந்து இங்குள்ள கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும், மா.லெ. குழுக்களும் ஏன் பாடம் கற்கவில்லை?

இந்தியாவை ஒரு தேசமென்றும், இந்தியப்புரட்சிக்கு வேலைத்திட்டம் என்றும் எப்படி வகுத்தார்கள்? ரசியப்புரட்சி என்பது முகாமையாக ரசிய தேசிய இனத்தில் நடந்த புரட்சிதான்! ஜார்மன்னன் பிடித்து வைத்திருந்த பிற தேசிய இனங்களில் ரசியப்புரட்சிக்கு ஆதரவு இருந்தது. இந்தியாவில் பல் தேசிய இனங்களிடையே புரட்சி நடத்த எப்படி முடிவுக்கு வந்தார்கள்? சற்றொப்ப எழுபது ஆண்டுகளாக அனைத்திந்தியப் புரட்சியில் என்ன முன்னேற்றம் கண்டார்கள்?

தமிழ்த்தேசியம், தமிழ்த்தேச விடுதலை என்றால் மேற்படி கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளுக்கும், மா.லெ. குழுக்களுக்கும் எட்டிக் காயாய் கசக்கிறது. “தமிழ்த்தேசியம்” என்பது மார்க்சிய - லெனினிய அடிப்படையில் தவறான கருத்தியல் என்று இவர்கள் ஒருபோதும் மெய்ப்பித்ததில்லை. அது குறித்து உருப்படியாக கருத்தியல் தருக்கம் நடத்தி உண்மையை உள்வாங்கிக்கொள்ள ஒருபோதும் இவர்கள் முன்வந்ததில்லை.

தமிழ்த்தேசியப் புரட்சிப்பதாகையை ஏந்தியுள்ள அமைப்புகள் மீதும் அவர்களின் கருத்தியல் மீதும் பிரிவினைவாதம், பிராந்தியவாதம், தமிழ் இனவெறி என்று கொச்சை மொழிகள் கூறுவதோடு நிறுத்திக்கொள்கின்றன.

மார்க்சியம் - லெனினியம் - என்ற தத்துவத்தின் முதுகுக்குப் பின்னால் இவ்வமைப்புகளின் தலைவர்கள் ஒளிந்து கொள்கிறார்கள் மார்க்சிய - லெனினியத் தத்துவத்தை உரியவாறு இவர்கள் உள்வாங்கிக் கொள்ளவுமில்லை. அதைத் தாங்கள் வாழும் சமூக நிலைமைக்கேற்ப வளர்க்கவுமில்லை.

பெரியார், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்கள், வர்ணம், சாதி, பார்ப்பனியம் குறித்துச் செய்துள்ள ஆய்வுகளைக் கற்று உள்வாங்கி, அவற்றை மார்க்சிய இயங்கியலுக்கேற்ப தகவமைத்து, மார்க்சிய - லெனினியத்துடன் இணைக்க வேண்டும். அந்த ஆய்வுப் பணியை இவர்கள் செய்யவில்லை.

தேசம், தேசிய இனம், மொழி ஆகியவை குறித்த ஆய்வுகள் மார்க்சிய - லெனினியத்தில் இருக்கின்றன. ஆனால் அவை இன்னும் மேம்படுத்தி வளர்க்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தைப் பாட்டாளிவர்க்கம் ஆதரிக்க வேண்டும் என்ற வரம்புடன் அது நிற்கிறது. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தைப் பாட்டாளிவர்க்கம் முன்னெடுக்க வேண்டும் என்று அது மேம்படுத்தப்படவேண்டும்.

பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (Self Determination with the right to secede ) என்பதில், பிரிந்து போவதைவிடவும் கூட்டாட்சியில் இடம் பெறுவதற்குக் கூடுதல் அழுத்தம் தரப்படுகிறது. பாட்டாளிவர்க்கம் சொந்த தேசத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும், பாட்டாளிவர்க்க சர்வதேசியம் என்ற கருத்திற்கு அதை உட்படுத்துவதால், பாட்டாளி வர்க்கம் தனது சொந்த தேசியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய தேவையைக் குறைத்து, அது சர்வதேசியத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் கருத்து வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேசியம் என்பது இப்பொழுது கருத்தளவில் தான் இருக்கும். மெய்நடப்பில் சர்வதேசியம் உருவாவது நிகரமைத் தேசங்கள் பற்பலவாக உலகில் பெருகிய பின்னரே நடக்கும். தொலைவான எதிர்காலத்தில் செயல்பட வேண்டிய நடைமுறையை, அதாவது, சர்வதேசியத்திற்கு தேசியத்தை உட்படுத்துவதை இப்பொழுதே கடைபிடிக்க முடியாது; கூடாது.

பாட்டாளிவர்க்க சர்வதேசியம் அமைவதற்கு முன்நிபந்தனை, தனியான தேசம் ஒவ்வொன்றும் அதனதன் முரண்பாடுகளைத் தீர்த்து நிகரமைச் சமூகம் அமைப்பதுதான். தனி ஒரு நாட்டில் நிகரமைப்புரட்சி செய்வதுதான். மற்ற நாடுகளுக்கு அக்கொள்கை காலப் போக்கில் பரவி பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அமைய வழிவகுக்கும் என்று லெனின் கூறினார். ஒரே நேரத்தில் உலகப்புரட்சி செய்தால் தான் பாட்டாளிவர்க்க சர்வதேசியம் உருவாகும். தனியொரு நாட்டின் நிகரமையும் நிலைக்கும் என்றார் டிராட்ஸ்கி. டிராட்ஸ்கி கோட்பாடு கானல்நீர் பருக ஓடிய கதையாகவே முடியும்.

தனியொரு தேசப் புரட்க்கு முன்னுரிமை தராமல் சர்வதேசியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது, மறுக்கப்பட்ட டிராட்ஸ்கியத்திற்கு மறு வாழ்வு கொடுப்பதாகவே ஆகும். மொழி, தேசிய இனம் ஆகியவை குறித்த ஆய்வுகள் மார்க்சிய- லெனினியத்தில் இருக்கின்றன. இன்று நாம் முன்வைக்கும் ஒரு மொழிக் கொள்கை லெனினிடமிருந்து கற்றுக்கொண்டது தான். ஆனாலும் மொழியின் சமூகவியல் குறித்து மேலும் வளர்க்க வேண்டிய கூறுகள் இருக்கின்றன.

உற்பத்தி சக்திகளில் ஒன்றாக மொழி இருப்பதைக் கிட்டத்தட்ட ஸ்டாலின் சொல்லிவிட்டார். ஆனால், அந்த அடிப்படையில், சமூக மாற்றத்தில் மொழிக்குள்ள தனித்தன்மையான பாத்திரத்தை அவரோ லெனினோ தெளிவாக வரையறுக்கவில்லை. சமூகக் கட்டுமானத்தின் அடித்தளத்திலும் மேல் தளத்திலும் மொழி செயல்புரிகிறது. இரண்டுக்கும் பொதுவானது மொழி என்கிறார் ஸ்டாலின். சமூகத்தில் மொழிக்குள்ள இயங்கு ஆற்றலை (Dynamics) உரியவாறு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. ஆனால் அதற்கான அடிப்படைக் கூறுகள் மார்க்சியத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. தேசிய இனத்தின் சமூக இயங்கு ஆற்றலை உரியவாறு மார்க்சியம் அடையாளம் காணவில்லை. தேசிய இனக் கோரிக்கைகளை சனநாயகக் கோரிக்கைள் என்ற அளவில்தான் லெனின் பார்க்கிறார். சமூக வளர்ச்சியில், சமூக மாற்றத்தில் தேசிய இனம் வகிக்கும் தீர்மானகரமான பாத்திரம் விளக்கப்பட வேண்டும். தேசிய இனச்சிக்கலை மூன்றுவகையாக லெனின் பார்த்தார்.

1. வளர்ச்சி அடைந்த முதலாளிய நாடுகள் தங்கள் தேசிய இனச்சிக்கலைத் தீர்த்துக் கொண்டன. தேச அரசுகளை உருவாக்கிக் கொண்டன.

2. ரசியா போன்ற, முதலாளியம் வளர்ச்சி பெறாத மண்டல வல்லாட்சிகள் பக்கத்துத் தேசங்களை ஆக்கிரமித்துத் தன்னுடன் சேர்த்துக்கொண்டன. (இப்பொழுது சீனா ஆக்கிரமித்து வைத்துள்ள திபெத், துருக்கிஸ்தான் ஆகியவற்றையும் இந்த வகையினத்தில் சேர்த்துக் கொள்ளலாம் - கட்டுரையாளர்)

இதற்கான தீர்வாக, பிரிந்துபோகும் உரிமையுள்ள தன்னுரிமையை முன்வைத்தார். சமத்துவ அடிப்படையில் இந்தத் தேசிய இனங்கள் சேர்ந்தும் இருக்கலாம். அதற்கு வாய்ப்பில்லையேல் பிரிந்தும் போகலாம்.

3. ஏகாதிபத்தியங்கள் பிடித்துவைத்துள்ள காலனி நாடுகள். இவற்றிற்கு விடுதலையே ஒரே தீர்வு.

வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகளில் கூட இப்பொழுது தேசிய இனச்சிக்கல் எழுந்து, அங்கும் தனிநாட்டுக் கோரிக்கைள் முன்னுக்கு வந்துள்ளன.

எடுத்துக்காட்டாக, ஒருங்கிணைந்த அரசில் (ஹி.ரி.- பிரிட்டனில்) மார்க்ஸ், லெனின் காலத்திலிருந்து உள்ள அயர்லாந்து விடுதலைப்போராட்டம் இன்னும் தொடர்கிறது. அதை ஒரு விதிவிலக்காகக் கருத முடியாத வகையில் இப்பொழுது அங்கு ஸ்காட்லாந்து விடுதலை இயக்கம் செல்வாக்குப் பெற்றுள்ளது. ஸ்பெயினில் பாஸ்க்கு, கட்டலான் விடுதலை இயக்கங்கள் இயங்குகின்றன. உலகக் கவனத்தை அவை ஈர்க்கின்றன. கனடாவில் கியுபெக்கில் பிரெஞ்சுக்காரர்கள் விடுதலை கோருகிறார்கள்.

இரண்டாவது கூறாக, பிரிந்து போகும் உரிமையுடன் தன்னுரிமை பெற்று, பல தேசிய இனங்கள் கூட்டரசில் இணைவது என்பதாகும். இவ்வாறு இணைந்த தேசிய இனங்கள், சோவியத் ஒன்றியம், செக்கஸ்லோவாக்கியா, யுகோஸ் லாவியா கூட்டரசுகளிலிருந்து பிரிந்து தங்களுக்குரிய தனித் தனித் தேசங்களை அமைதியாகவோ அல்லது ஆயுதப்போர் வழியிலோ நிறுவிக் கொண்டன. தன்னுரிமையில் கூட்டாட்சிக்கு அழுத்தம் கூடுதலாகத் தரப்பட்டது. தனித் தனி அரசுகளாக அவை பிரிந்ததன் மூலம் பிரிந்து போகும் உரிமையே கூடுதல் அழுத்தம் பெற்றுள்ளது.

மூன்றாவதாக, காலனிகள் விடுதலை. காலனிகள் விடுதலை அடைந்தன. விடுதலை அடைந்த காலனிகளுக்குள் தேசிய இன ஒடுக்குமுறைகள் மேலோங்கி, அவை தேசிய விடுதலை கோரிப்

போராடுகின்றன. பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் விடுதலை அடைந்தது. எத்தியோப்பாவிலிருந்து எரித்திரியா விடுதலை அடைந்தது. இந்தோனேசியாவிலிருந்து கிழக்குத் திமோர் விடுதலை அடைந்தது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சூடான் போன்ற முன்னாள் காலனிகளுக்குள் சிக்கிக்கொண்ட இந்நாள் காலனிகள் விடுதலைக்குப் போராடுகின்றன.

தேசிய இனசிக்கலில் உள்ள இந்த நான்காவது கூறு, லெனின் காலத்தில் முன்னுக்கு வரவில்லை. இரண்டாம் உலகப்போருக்குப்பின் காலனிகள் விடுதலை அடைந்த பின்னரே இந்தக்கூறு முன்னுக்கு வந்தது. இதற்கான விடையை லெனினிடம் தேடாமல், நாம்தான் காணவேண்டும்.

ஒரு தேசிய இனம் தனக்கான தனிநாட்டை அமைத்துக்கொள்வது அதன் அடிப்படை உரிமை என்ற லெனின் வரையறுப்பு, இந்த நான்காவது கூறில் வரும் தேசிய இனச்சிக்கலின் தீர்வுக்கு வழிகாட்டும். அவ்வாறு அதை நாம் புரிந்துகொண்டு லெனினியத்தை வளர்க்க வேண்டும்.

வாக்குச்சீட்டு ஒடுக்குமுறை

முன்னாள் காலனிகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ள இந்நாள் காலனிகளின் நிலை என்ன? அனைத்துத் தேசிய இனங்களிலும் உள்ள மக்களுக்கு ஆளுக்கொரு வாக்கு என்ற சனநாயகத் தோற்றத்திலான மாயப்போர்வைக்குள் இந்த வகைக் காலனியம் மறைக்கப்படுகிறது.

ஏகாதிபத்தியங்கள், தங்களின் கொள்ளைக்கான நிர்வாக ஏற்பாடாக, பல்வேறு தேசிய இனங்களை

ஒன்றாகப் பிணைத்து செயற்கையான நாடுகளை உருவாக்கின. அவ்வாறு செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றுதான் இந்தியா.

ஏகாதிபத்தியங்கள் இவ்வாறான செயற்கை நாடுகளைவிட்டு வெளியேறியபின் இந்நாடுகளில் உள்ள பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட தேசிய இனம், சிறுபான்மைத் தேசிய இனங்களை ஒடுக்கி, அதே செயற்கை நாடுகளுக்குள் வைத்தன.

அந்த ஒடுக்குமுறையை மறைக்க, சனநாயகத் தோற்றத்துடன் கூடிய ஆளுக்கொரு வாக்கு என்ற தூண்டிலை நீட்டின. ஆளுக்கொரு வாக்கு என்பது இந்நாடுகளில், தேசிய ஒடுக்கு முறையை மறைக்கும் மூடுதிரையே!

பெரும்பான்மைத் தேசிய இனத்தின் பேராளர்களே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருப்பர். அந்தப் பெரும்பான்மை வாக்களித்து, சிறுபான்மைத் தேசிய இனங்களை ஒடுக்கவும், சுரண்டவும் சட்டங்களை நிறைவேற்றும். எந்த வரலாற்றுத் தொடர்பும், சமூகத் தொடர்பும், நிலத்தொடர்பும் இல்லாத வெவ்வேறு தேசிய இனங்களை ஒன்றாக இணைத்து வைத்துவிட்டு , அவற்றுள் ஒரு தேசிய இனம் பெரும்பான்மை, இன்னொரு தேசிய இனம் சிறுபான்மை என்பது வரலாற்று அநீதி.

ஒரு வீட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்துடன் அதனோடு தொடர்பில்லாத இன்னொரு குடும்பத்தைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டு, வீட்டுக்குரிய குடும்பத்தினர் சிறுபான்மை ஆகிவிட்டனர் என்றால் எப்படியோ அப்படியே இதுவும் வல்லடி வழக்கு.

பெரியார்

தமிழ்நாட்டில் இன அரசியலையும், இன விடுதலை அரசியலையும் விரிந்த பகுதி மக்களிடம் கொண்டுசேர்த்தவை தி.க.வும். தி.மு.க.வும் ஆகும். இந்த இன அரசியலின் தத்துவத் தந்தை பெரியார் ஆவார். பெரியார் கடைசிவரை தமிழ்நாட்டின் விடுதலைக் கோரிக்கையை வலியுறுத்தினார். அவர் 1973 டிசம்பரில் மறைவதற்கு முன் வந்த செப்டம்பர் -17 பிறந்த நாள் விடுதலை இதழ் மலருக்கு அவர் கடைசியாக எழுதிய கட்டுரையில் தனித் தமிழ்நாட்டுக்காகப் போராட, மக்களுக்கு உறுதியான வேண்டுகோள் விடுத்தார்.

தி.மு.க. 1963 -இல் விடுதலைக் கோரிக்கையைக் கைவிட்டது. “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முத்திரை மொழியை விடுதலை ஏட்டின் முகப்பில் தாம் உயிரோடிருக்கும் வரை போட்டு வந்தார் பெரியார். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நிலையில், மணியம்மையாரும் ஆசிரியர் வீரமணியும் அம்முத்திரை மொழியை விடுதலையிலிருந்து நீக்கிவிட்டனர்.

ஆரிய இனத்தை எதிர்த்த இந்த இனவிடுதலை இயக்கத் தலைவர்கள் ஆரியர்களுக்கு எதிராக திராவிடர்கள் என்ற குழப்பமான இனக் கருத்தியலை முன்வைத்தார்கள். 3500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களுக்கு ஆரியர்கள் சூட்டிய திரிபுப் பெயர்தான் திராவிடர் என்பது. அதையே புத்தாக்க கால ஐரோப்பிய ஆய்வாளர்களும் எடுத்துக் கொண்டனர்.

திராவிட இயக்கம் சுட்டிய திராவிட இனத்தில் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி உள்ளிட்டோர் இடம் பெற்றனர். தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளம் அடங்கிய “திராவிட நாட்டுக்கு” விடுதலை கோரினர். ஆனால் தமிழர் தவிர மற்ற மூன்று மாநிலத்தவரும் தங்களைத் திராவிடர் என்றும் அடையாளப் படுத்திக் கொள்ளவில்லை.

தங்கள் நாடு திராவிட நாடு என்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இயற்கையான தங்கள் தங்கள் தேசிய இன அடையாளத்தையும், அதன் வழித் தேசத்தையுமே ஏற்றனர். பிற்காலத்தில் “தெலுங்கு தேசம்” என்ற பெயரில் ஒரு கட்சி உருவானதையும் கவனத்தில் கொள்ளலாம்.

மற்ற மூன்று மாநிலங்களிலும் தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் தி.க. கிளையையோ, தி.மு.க. கிளையையோ தொடங்கவில்லை. அம்மாநிலங்களில் உள்ள தமிழர்களில் ஒரு சாரார் இக்கழகங்களின் கிளைகளைத் தொடங்கினர். இன அரசியலையும், இனவிடுதலைப் போராட்டத்தையும் விரிந்த பகுதி மக்களிடம் கொண்டு சேர்த்த இக்கழகங்கள், இயற்கையான தமிழின, தமிழ்த்தேசிய அரசியலை முன்வைக்கவில்லை.

தந்தை பெரியார் 1950- களில் தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார். ஆனாலும் அவர், தமக்கு மொழிப்பற்றோ, இனப்பற்றோ இல்லை; மனிதப்பற்றுதான் உண்டு என்று அவ்வப்போது கூறி வந்தார். மனிதப் பற்றின் ஒரு கூறுதான் இனப்பற்று. ஆனால் தேசியம் என்பதே பாசிசம் என்று கூறி தேசிய இனக்கோட்பாட்டை பெரியார் எதிர்த்தார். இட்லரின் செர்மானிய தேசிய வெறியால் எவ்வளவு பேரழிவு ஏற்பட்டது என்று விளக்கினார். இந்திய தேசியத்தை எதிர்ப்பதற்காகத் தேசியம் என்ற கருத்தியலைப் பெரியார் எதிர்த்தார் என்று கூற முடியாது.

தமது புரிதலுக்கேற்ப கோட்பாட்டு அடிப்படையில் தேசியம் என்ற கருத்தியலைப் அவர் எதிர்த்தார். இந்த நிலைபாடு, இனச்சிக்கலில் அவரது தன் முரண்பாட்டையே காட்டியது. தேசிய இன அடிப்படையிலான, தமிழ்த்தேசியத்தை அவர் ஏற்காததால் வர்ண - சாதி ஆதிக்கமற்ற, மூடநம்பிக்கை ஒழிந்த ஒரு தனிநாடு , கன்னியாகுமரி மாவட்ட அளவிற்குக் கிடைத்தால் கூட, அதை ஏற்றுக் கொள்வேன் என்றார்.

இந்த நிலைபாட்டைத் திறனாய்வு செய்தால், கன்னியாகுமரி மாவட்டந் தவிர்த்த பிறபகுதித் தமிழர்களிடம் வர்ணசாதி ஆதிக்கமும் மூடநம்பிக்கைகளும் நீடித்தால் அதைப்பற்றி பெரியாருக்குக் கவலை இல்லையா என்ற வினா எழும். உண்மையில் அப்படிப்பட்ட எண்ணம் அவருக்குக் கிடையாது.

அப்படி வினா எழுப்பாமல், வர்ண - சாதி ஆதிக்கத்தின் மீதும் மூடநம்பிக்கைகள் மீதும் பெரியாருக்கு எந்த அளவு வெறுப்பு இருந்தது என்ற அளவில் மட்டுமே நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு மேல், இன அரசியலில், பெரியாரின் “கன்னியாகுமரி மாவட்ட அளவு” என்ற

இக்கூற்றை வழிகாட்டும் நெறியாக ஏற்கக்கூடாது.

மொழிகுறித்தும் பெரியாரின் கொள்கை குழப்பமானதே. தமிழ்நாட்டில் வடமொழி ஆதிக்கம் ஆட்சி முதல் அடுப்பங்கரை வரை இருப்பதை எதிர்த்துப் போராடியவர் அவர். அவ்விடங்களில் தமிழைக் கொணரப்பாடுபட்டவர். ஆனாலும் அவர்க்கு மொழி குறித்து முன்னுக்குப்பின் முரணில்லாத தெளிந்த வரையறுப்பு இல்லை.

எனவே ஒரு கட்டத்தில் தமிழைக் “காட்டுமிராண்டி மொழி” என்றார். தமிழைக் கைவிட்டு, ஆங்கிலத்தைக் கல்வி மொழியாகவும் வீட்டுமொழியாகவும் மாற்றிக் கொள்ளச் சொன்னார் 1965-இல் மாணவர்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்த்தார். தமிழர்கள் ஆங்கிலம் கற்றால், பாரப்பனர்களுடன் போட்டி போட்டு முன்னேற முடியும். ஆங்கிலம் ஓர் அறிவியல் மொழி அதனால் தமிழர்கள் பகுத்தறிவு பெறுவார்கள் என்று பெரியார் கருதினார். இக்கருதுகோள்கள் பிழையானவை. ஆங்கிலம் கற்று உயர் அலுவல்களில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் பலர் பார்ப்பனியச் சடங்குகளை விரும்பி ஏற்றுக்கொள்வதைப் பார்க்கிறோம்.

படித்த பிற்படுத்தப்பட்டவர்களில் பலர் சாதி ஆதிக்க உணர்ச்சியோடு செயல்படுவதையும் பார்க்கிறோம். ஆங்கிலத்திலும் மூட நம்பிக்கைகள் ஏராளமாக இருக்கின்றன. இங்கிலாந்திலிருந்து இங்குவந்து “ஆவி எழுப்புதல்” கூட்டங்களையும் “தேவனின் அற்புதக் கூட்டங்களையும்” ஆங்கிலத்திலேயே நிகழ்த்துவோரை பார்க்கிறோம். ஒரு மொழியில் பகுத்தறிவுக் கருத்துகளும் இருக்கும்; மூடக்கருத்துகளும் இருக்கும். சுரண்டும் வர்க்கத்தின் கருத்தும் இருக்கும், சுரண்டப்படும் வர்க்கத்தின் கருத்தும் இருக்கும். மொழியானது சமூகக் கருத்துகளின் கொள்கலன். தமிழே கல்வி மொழியாகவும், ஆட்சிமொழியாகவும் வழிபாடு உள்ளிட்ட அனைத்துப் பண்பாட்டு மொழியாகவும் ஆகவேண்டும். இந்நிலைபாடே உலகு தழுவி நிலவும் தாய்மொழி குறித்த மொழிக் கொள்கைக்கு இணக்கமானது.

ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகக் கற்கலாம். மேற்கண்ட திருத்தங்களுடன் பெரியாரியலை செழுமைப்படுத்தாமல் தமிழகத்தில் , இன்றைய நிலையில் இன, மொழி அரசியலுக்குப் பெரியாரியல் சிந்தனையாளர்களால் முகம் கொடுக்க முடியாது. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைக்கு முற்றிலும் முரணாக, “சொந்த புத்திவேண்டாம், ஐயா தந்த புத்தி போதும்” என்று ஆசிரியர் வீரமணி முழங்குவது பெரியாரின் முதுகுக்குப்பின்னால் ஒளிந்து கொள்வது தவிர வேறல்ல.

ஒரு கருத்தியல் வளரும் அல்லது தேயும். இரண்டுமின்றி இருந்தபடியே இருக்காது என்பது இயங்கியல்.

அம்பேத்கர்

அம்பேத்கரின் வர்ண - சாதி மற்றும் பார்ப்பனியம் குறித்த ஆய்வுகள் சமூக அறிவியலுக்கு அவர் வழங்கிய சிறந்த பங்களிப்பாகும். ஆனால் அவர் இந்திய தேசத்தை ஏற்றுக்கொண்டதும், மொழிவாரி மாநிலப் பிரிவினையை எதிர்த்ததும சரியல்ல. அந்தக் குறிப்பிட்ட சிக்கலில் அவர் பார்ப்பனியத்தோடு இணக்கம் கண்டதாகவே ஆகியது.

இல்லாத இந்திய தேசியத்தை உருவாக்கியதில் பார்ப்பனியத்தின் பங்களிப்பு கூடுதலாகவே உள்ளது. பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும் நீக்கிவிட்டால் இந்திய தேசியம், தாங்குநிலை இல்லாது கீழே விழுந்து நொறுங்கிவிடும். இந்தியத் தேசியமும் இந்திய அரசும் இல்லையென்றால் பார்ப்பனியம் அனாதை ஆகிவிடும். அம்பேத்கர் சிந்தனைகளில் உள்ள “இந்திய தேசியக்” கருத்துகளை நீக்கிவிட்டு, சாதி ஒழிப்புக் கருத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தத்துவ விசுவாசம்

எந்தத் தத்துவத்திலும் தள்ளுவன தள்ளி கொள்ளுவன கொள்ள வேண்டும். அதற்கும் மேலே, ஒரு தத்துவத்தில் ஏற்கத்தக்க பல கூறுகள், ஏற்கத்தக்க பல செய்திகள் இருக்கும். அவை அனைத்தையும் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் செயல்படுத்த முடியாது. அப்படி அனைத்தையும் செயல்படுத்துவதற்கான சமூகக் கள நிலையும் இருக்காது; அதற்கான சமூகக் கோரிக்கையும் இருக்காது.

ஒரு தத்துவத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்பதன் பொருள் அத்தத்துவத்தில் உள்ள சாரமான ஆய்வு முடிவை ஏற்றுக்கொள்கிறோம் என்பதாகும். அதிலுள்ள பொருந்தாத சில நிலைபாடுகளையும் ஏற்பதாக பொருள் ஆகாது.

இவ்வாறு நாம் கூறுவதைத் தத்துவத்திற்கு விசுவாசம் காட்டாத செயல் என்று சிலர் சொல்லக்கூடும். மார்க்சியம் உள்ளிட்ட சமூகவியல் தத்துவங்கள் தங்கள் மீது விசுவாசம் வைக்கும்படி கோருவதில்லை. மதத் தத்துவங்கள் தாம் தம்மை விசுவாசிக்கும்படி கோருகின்றன. மெய்ப்பிக்கும் சான்றுகள் மீது நிற்காமல், வெறும் நம்பிக்கைகள் மீது கட்டப்பட்ட பொம்மைக் கோபுரங்களாக உள்ள மதத் தத்துவங்கள் விசுவாசத்தைக் கோரும். சமூக அறிவியல் அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்ட தத்துவங்கள் விசுவாசத்தைக் கோருவதில்லை; புரட்சியைக் கோருகின்றன. அவை, தம்மை மேலும் செழுமைப்படுத்துமாறு அவாவுகின்றன. மார்க்சிய இயங்கியல் இப்படித்தான் கோருகிறது.

புரட்சித் தத்துவம் ஒரு போர்வாள். அதை அவ்வப்போது கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். கூர்மைப்படுத்த முடியாத ஒரு கூறு அத்தத்துவத்தில் இருக்கிறதென்றால் அதைக் கைவிட்டு, அதன் இடத்தில் சமகால அறை கூவலைச் சந்திக்கும் புதிய கோட்பாட்டைப் பொருத்த வேண்டும்.

புரட்சித தத்துவம் என்ற போர்வாள் பகை முகாமை எதிர்த்துப் போராடுவதற்குரியது. அந்த வேலைக்கு அதைப்பயன்படுத்தாமல் அதை நமது முதுகு சொறியப் பயன்படுத்தக்கூடாது. சமூகத்திற்காகத்தான் தத்துவம், தத்துவத்திற்காக சமூகம் அன்று. சமூகத்தால் தத்துவம் செழுமைப்படுவதும், தத்துவத்தால் சமூகம் மாறுதல் காண்பதும் ஒன்று இன்னொன்றின் மீது தாக்கம் செலுத்தும் செயல்வழி ஆகும்.

தத்துவம் இருவழிகளில் செயல்படும். ஒன்று வழிகாட்டும் செயல். இன்னொன்று வழிமறிக்கும் செயல். வழிகாட்டும் செயல்தான் முதன்மையானது. அதுவே அத்தத்துவத்திற்கு சமூக ஏற்பையும் செல்வாக்கையும் ஈட்டித்தருகிறது. வழிமறிக்கும் செயல் பக்கவிளைவு போன்றது. சமூகவியல் தத்துவம் மட்டு மன்று, இயற்பியல், வேதியியல் போன்ற அறிவியல் கோட்பாடுகளும் வழிமறிக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

தத்துவமேதைகள், அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரின் அறிவாற்றல், அடுத்த தலைமுறைச் சிந்தனையாளர்களுக்குப் பெரும் வியப்பையும் அவர்கள் மீது பெரும் மதிப்பையும் உண்டாக்கும். அவர்களை மீறிச் சிந்திக்க முடியாதபடி ஒருவகை மலைப்பையும் உண்டாக்கும். அவர்கள் இமயத்தின் கீழ் உள்ள ஒரு சிறு பாறையாகத் தம்மைக் கருதிக்கொள்வர்.

நியூட்டனின் எந்திரவியல் (Mechanics) விதிகள் இயற்பியல் துறையில் புதிய ஊழியின் கதவுகளைத் திறந்துவிட்டன. அவரது கோட்பாடுகளுள் ஒன்றின் அனைத்து தழுவியப் பொருத்தப்பாட்டின் மீது அடுத்த தலைமுறை அறிவியலாளர்களுக்கு ஐயம் ஏற்பட்டது. ஆனால் வெளியே சொல்லவில்லை.

நியூட்டன் மீது அவர்கள் வைத்திருந்த பெருமதிப்பும், நியூட்டனுக்கு அறிவியல் உலகில் இருந்த பெருஞ்செல்வாக்கும் தாங்கள் கண்டறிந்த உண்மையைச் சொல்ல முடியாமல் அவர்களைத் தடுத்து விட்டன. ‘வையகம் ஏசுமோ’, ‘மாசுவந்து எய்துமோ’ என்ற அச்சம், ஐயம்!

ஒரு பொருள் ஒரு நேரத்தில் ஒரு வடிவில்தான் இருக்கும் என்ற நியூட்டனிய இயற்பியல் விதி கேள்விக்குள்ளானது. ஒரு பொருள் ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களிலும் செயல்படும் என்ற உண்மையை சொல்லத் தயங்கி சொல்லாமலே விஞ்ஞானிகள் பலர் இறந்துவிட்டனர். அவர்களுக்கும் பின்னர் நீல் போர், ஐன்ஸ்டின் ஆகிய விஞ்ஞானிகள் துணிச்சலாக அந்த உண்மையை வெளியிட்டனர்.

கற்றை இயற்பியல் ( Quantum Physics) உருவானது. அணுவின் உள் துகள்கள் (Sub- Atomic Particles) ஒரே நேரத்தில் துகளாகவும், அலையாகவும் இருக்கிறது என்பதை மெய்ப் பித்தார்கள். இந்தப் புதிய கண்டுபிடிப்பால், நியூட்டன் குறித்த விதிகள் அனைத்தும் தவறு என்று ஆகிவிடவில்லை.

நியூட்டன் புகழுக்குக் களங்கமும் வந்திடவில்லை. அந்தக்காலத்தில் அவர் (1642-1727) செய்த சாதனைகளுக்காக அறிவியல் உலகில் அவர் புகழ்மேலும் மெருகேறிக் கொண்டுதான் உள்ளது.

சமூகவியல் தத்துவ மேதைகளுக்கும் நியூட்டன் குறித்த மேற்கண்ட எடுத்துக்காட்டு பொருந்தும்.

முந்தையப் புரட்சிகளின் மறுபிறப்பு

ஏற்கெனவே, தமிழ்நாட்டில் நடந்த வரலாற்றுப் பதிவு பெற்ற பெரும் நிகழ்வுகளையோ, அல்லது பிறநாட்டுப் புரட்சிகளையோ அப்படியே நகலெடுத்து மீண்டும் அரங்கேற்ற நினைக்கக் கூடாது. அப்படி முயன்றாலும் அது நடக்காது. அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவற்றைக் கற்றுக்கொள்வது வேறு; நகலெடுப்பது வேறு.

இது குறித்து காரல் மார்க்ஸ் (1818-1883) கூறுவது கவனத்திற்குரியது.

“பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூகப்புரட்சி தன்னுடைய கவிதைத் திறனைப் பழங்காலத்திலிருந்து பெற முடியாது; எதிர்காலத்திலிருந்து தான் பெற முடியும். அது தன்னுடைய பணிகளைத் தொடங்குவதென்றால் கடந்த காலத்தைப் பற்றிய எல்லா மூட நம்பிக்கைகளையும் முதலில் ஒழிக்க வேண்டும். முன்பு நடைபெற்ற புரட்சிகள்ள் தங்களுடைய உள்ளடக்கத்தைத் தாங்களே முனை மழுங்கச் செய்ய்ய்ய்ய்யும் வகையில் கடந்த காலத்தில் உலகத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்தன.”
- லூயி போன பார்ட்டின் பதினெட்டாம் புருமேர்- மார்க்ஸ் - எங்கெல்ஸ் தேர்வு நூல் - தமிழ், தொகுதி - 4

நாம் நடத்த வேண்டிய புரட்சிக்கு நாம் தாம் உள்ளடக்கத்தையும் போராட்டங்களையும் தீர்மானிக்க வேண்டும் என்றார் மார்க்ஸ். பழைய நிகழ்வுகளை நகலெடுக்கக் கூடாது என்றார். இதற்கொரு நல்ல உவமை சொன்னார்.

“புதிதாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளத் தொடங்குபவர் எப்பொழுதும் தன்னுடைய தாய் மொழியில் அதை மொழிபெயர்த்துக் கொள்வார். ஆனால் எப்பொழுது பழைய மொழியின் உதவியை நாடாமல் புதிய மொழியைக் கையாள்கிறாரோ, எப்பொழுது தாய் மொழியை மறந்து (துணைக் கழைக்காமல்) புதிய மொழியைப் பயன்படுத்துகிறாரோ, அப்பொழுது தான் அவர் புதிய மொழியின் தன்மையைப் புரிந்துகொண்டவர் ஆவார். அவரால் அந்த மொழியில் தம் கருத்துகளை எளிதில் வெளியிட முடியும்”-மேற்படி நூல்.

இந்தியப் புரட்சியை ரசியப்புரட்சி மாதிரி நடத்துவதா, சீனப்புரட்சி மாதிரி நடத்துவதா என்று ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடந்த விவாதம் சொல்லி மாளாது. கடைசியில் ஸ்டாலினிடம் அறிவுரை கேட்க மாஸ்கோவுக்குப் போனார்கள். மாதக்கணக்கில் அங்கு தங்கி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நடுவண் குழு தோழர்களிடம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுத் தோழர்கள் விவாதித்தனர். ஸ்டாலினிடமும் விவாதித்தனர். கடைசியில் இரண்டு புரட்சிகளின் தன்மைகளையும் கலந்து இந்தியப்புரட்சி நடத்துவது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது.

சி.பி.ஐ. மார்க்சிய-லெனினியக் கட்சியோ,(நக்சல்பாரிக் கட்சி) “சீனக்கட்சி எங்கள் கட்சி, சீனத்தலைவர் எங்கள் தலைவர்; சீனப்புரட்சி எங்கள் புரட்சி, சீனப்பாதை எங்கள் பாதை” என்று முழக்கமிட்டனர். ரசியப்புரட்சியிலிருந்தும் சீனப்புரட்சியிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியவற்றைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அப்புரட்சிகளின் மூல உத்தியையும் (Strategy) நடைமுறை உத்திகளையும் (Tactics) இங்கு கடைபிடிக்க முயல்வது, சொந்தப் பார்வை இன்மையையே காட்டும். தமிழின உணர்வு கொண்ட துடிப்பு மிக்க இளைஞர்கள் சிலர் ஈழ விடுதலைப் போர் போலவே தமிழ்த்தேசியப் புரட்சியும் நடைபெறும் என்று கருதுகிறார்கள்.

களங்கள் இரண்டும் வெவ்வேறு. கதைமாந்தர்களும் வேறு வேறு. தமிழீழ விடுதலைப் போருக்கு நாம் துணை நிற்பதும், அப்போரிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றைக் கற்றுக்கொள்வதும் கட்டாயம். ஆனால் அதைப் போலவே இங்கு தமிழ்த்தேசிய புரட்சி நடைபெறும் என்று கற்பனை செய்யக்கூடாது.

தமிழ்த்தேசியம்

ஆறரைக்கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டிற்கு இறையாண்மை இல்லாததால் உலக அரங்கில் நாம் நாதியற்றவர்களாக, அரசியல் அனாதைகளாக உள்ளோம். இந்தியாவின் காலனியாகத்தான் தமிழ்நாடு இருக்கிறது. தமிழக அரசு என்பது, இந்திய ஏகாதிபத்தியத்திற்குக் கங்காணி வேலை பார்க்கும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கட்சிகள் கங்காணிக் கட்சிகளாகவே செயல்படுகின்றன.

இனத்தை அடமானம் வைத்து பணம், பதவி, விளம்பரம் சேர்க்கும் பகற்கொள்ளைக் கூடாரங்களாகிவிட்டன அக்கட்சிகள். இந்தியாவில் அடிமைப்பட்ட இனமாகத் தமிழர்கள் இருப்பதால்தான் எவ்வளவோ போராடியும் ஈழத்தமிழர்களை நம்மால் பாதுகாக்க முடியவில்லை. நமது அடிமைத்தளையை அறுக்க வந்த போர் வாள் தமிழ்த்தேசியம்.

அரசியல், பொருளியல், பண்பியல்,உரிமைகளை மீட்க வந்த கருத்தியல் கருவி தமிழ்த்தேசியம்.

தமிழர்களை ஒருங்கிணைக்கும் தத்துவச்சொல் தமிழ்த்தேசியம்.

நமது தேசம் தமிழ்த்தேசம், நமது தேசியமொழி தமிழ், நமது தேசிய இனம் தமிழர், இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசு அமைப்பதே நமது இலக்கு என்ற வரையறுப்பே தமிழ்த் தேசியம்.

நமது மனதை மாசு படுத்தியுள்ள பார்ப்பனியத்தையும், சாதி அழுக்கையும் எரிக்கவந்த சமத்துவச்சுடர் தமிழ்த்தேசியம்!

“நாங்கள் தமிழர்கள் ஒரு மரத்தின் கிளைகள்” “ஒரு குலைக்காய்கள்” எங்களிடையே புகுந்துவிட்ட ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்போம் என்று சூளுரைக்கும் கோட்பாடு தமிழ்த்தேசியம்.

ஆணுக்குப் பெண் அடிமை என்ற கோணலை நிமிர்த்த வந்த கொள்கைச் சம்மட்டி தமிழ்த்தேசியம்.

இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தமிழர் மரபில் உள்ள இயற்கைச் சமன்பாடு போன்றவற்றைப் பேணுவது தமிழ்த்தேசியம்.

பன்னாட்டு ஏகபோகங்கள், அனைத்திந்தியப் பெருமுதலாளிகள் ஆகியோரின் சுரண்டலிலிருந்து தமிழக உழைக்கும் மக்களை விடுவிக்கும் நிகரமை (சோசலிச)த் திறவுகோல் தமிழ்த்தேசியம்.

வர்ணசாதி - ஒடுக்குமுறை, வர்க்க ஒடுக்குமுறை, ஆணாதிக்கம் ஆகியவை ஒழிந்த சமத்துவத் தாயகமாகப் புதிய தமிழ்த் தேசத்தைப் படைக்க வந்த புரட்சியின் பெயர் தமிழ்த்தேசியம்.

மார்க்சிய - லெனினியம், பெரியார் - அம்பேத்கர் சிந்தனைகள், தமிழர் மரபில் உருவான அறச்சிந்தனைகள் ஆகிய அனைத்தையும் உரியவாறு உள்வாங்கிக் கொண்ட புதிய வார்ப்பே நாம் முன்வைக்கும் தமிழ்த்தேசியம்.

நாடாளுமன்றப் பாதையும் அன்று; ஆயுதக்குழுப்பாதையும் அன்று. போர்க்குணமுள்ள மக்கள் போராட்டப்பாதையே தமிழ்த்தேசியப் புரட்சியின் பாதை.

தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி ஏந்தியுள்ள தமிழ்த்தேசியத்திற்கு இவ்வாறான தத்துவச் செறிவு உள்ளது. “டசன் கணக்கில் திட்டங்கள் தீட்டுவதை விடவும் ஒரு செயல் மேலானது” என்ற மார்க்சிய வழிகாட்டலையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

தத்துவம் இல்லாத நடைமுறை குருட்டுத்தனமானது.

நடைமுறை இல்லாத தத்துவம் மலட்டுத்தனமானது.

கடந்த காலச் சாதனைகளிலிருந்து வீரம் பெறுவோம்;

கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் பெறுவோம்!